ஜப்பானின் குமாமேட்டோ மருத்துவமனையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அறுவை அரங்கில் ஆபத்தான சூழல் நிலவிய நிலையிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் துளியும் அச்சமின்றி தொடர்ந்து நான்கு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். பலத்த நடுக்கத்தால் மருத்துவ உபகரணங்கள் தரையில் உருண்டோடிய போதிலும், நோயாளியின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதிய மருத்துவக் குழுவினர் அமைதியாகவும் உறுதியாகவும் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். இந்த வியக்கத்தக்க சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உலகளாவிய அளவில் மாபெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கடந்த ஜூலை 28 அன்று இந்த எதிர்பாராத நிலநடுக்கம் தாக்கிய போது, மருத்துவமனையின் உள்கட்டமைப்புகள் சில சேதமடைந்ததால் வெளிநோயாளர் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளர் பிரிவுகள் தொடர்ந்து செயல்பட்டன. தீவிர பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல்வழக்கம்போல மருத்துவமனை முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்திலும் எந்தவொரு நோயாளிக்கும், மருத்துவப் பணியாளருக்கும் சிறு காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட இந்தத் துணிச்சலான செயல், உரிய பேரிடர் காலப் பயிற்சி எத்தகைய உயிர்களைக் காப்பாற்றும் என்பதற்குச் சிறந்த சான்றாகியுள்ளது.
通常診療を再開した熊本県八代市の「熊本総合病院」
今回の熊本地震の瞬間、手術室の緊迫した様子が病院のカメラに映っていました↓https://t.co/TS7biPg7wQ pic.twitter.com/mRtPFegV8B
— NHKニュース (@nhk_news) August 6, 2026
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும் குழுப்பணியையும் சிலாகித்து வருகின்றனர். குறிப்பாக, நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் சிறிதும் அசையாமல் தனது கவனத்தை சிதறவிடாமல் நோயாளியைக் காத்ததுடன், மயக்க மருந்து நிபுணர் உடனடியாக நோயாளியின் சுவாசக் குழாயைப் பாதுகாத்த விதம் போன்ற பல நுணுக்கமான செயல்களை மருத்துவ உலகினர் வியந்து பாராட்டி வருகின்றனர். “இது வெறும் நிலநடுக்க வீடியோ அல்ல; மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் அசாத்தியத் துணிச்சலின் வடிவம்” என்று பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
