திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் துறையூர் கோவிந்தாபுரத்தில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புளியஞ்சோலைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர்கள் அய்யாற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து ஆற்றுக்குள் இறங்கிய மாலிக் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாலிக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.