காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, நடத்திய முதலாவது புத்தக திருவிழா நடைபெற்றது.

இதற்கான நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கி, பேசியதாவது,  முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, 53 துறை சார்ந்த வல்லுனர்களின் அயராத உழைப்பால் 104 புத்தக அரங்குகள், கோளரங்கம், மற்றும் பள்ளி கல்லூரிகளின் கலை நிகழ்ச்சிகள் என பல வகை போட்டிகள் அமைய பெற்று காஞ்சீபுரம் புத்தக கண்காட்சியை மெருகூட்ட செய்தன.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்நிகழ்வு 2022 டிசம்பர் 23 தொடங்கி 2023 ஜனவரி 2 வரை நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்கள் , கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்ததோடு மட்டுமல்லாமல், மாலை வேளைகளில் பேசிய சிறப்பு பேச்சாளர்களின் சீரிய உரையானது,  செவிக்கும்  விருந்தளித்தது.  மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சொன்ன ஒருமித்த கருத்து என்னவெனில் இதற்கு முன் வெவ்வேறு மாவட்டங்களில் அவர்கள் உரை நிகழ்த்திய புத்தக திருவிழாவில் வந்திருந்த கூட்டத்தை விட எண்ணில் அடங்கா கூட்டம் காஞ்சீபுரத்தில் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.