இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. ஆனால், அந்த உறுப்புகளைப் பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்பவர்களில் ஆண்களே முன்னணியில் உள்ளனர். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் உறுப்பு தானம் செய்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள் என தெரியவந்துள்ளது.
குடும்பத்தில் ஆண்களே பெரும்பாலும் வருமானம் ஈட்டுபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் நிதிச் சிக்கல் ஏற்படும் என்ற பயத்தில் குடும்பத்தினர் ஆண்களிடம் இருந்து உறுப்புகளைப் பெற தயங்குகின்றனர். இதனால் தாய்மார்களும், மனைவிகளுமே குடும்பத்தினருக்காகத் தங்கள் உறுப்புகளைத் தானமாக அளிக்க அதிக அளவில் முன்வருகின்றனர். ஆய்வுகளின்படி, மொத்த உறுப்பு தானத்தில் 73 சதவீதம் தாய்மார்களாலும், தம்பதிகளுக்குள் நடக்கும் தானத்தில் 91 சதவீதம் மனைவிகளாலும் வழங்கப்படுகின்றன.
சமூகப் பொருளாதாரக் காரணிகள் மட்டுமின்றி, உயிரியல் ரீதியான தடைகளும் பெண்களுக்குப் பெரும் சவாலாக உள்ளன. கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள் காரணமாக, அவர்களுக்குப் பொருத்தமான மாற்று உறுப்புகள் கிடைப்பது கடினமாகிறது. இதனால் பெண்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
மேலும், மருத்துவப் பரிசோதனை முறைகளிலும் பெண்களை விட ஆண்களுக்கே அறியாமல் சில சாதகமான சூழல்கள் அமைகின்றன. சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கணக்கிடும் மருத்துவக் குறியீடுகளில், ஆண்களுக்கு இருக்கும் அதிகப்படியான தசைநிறை காரணமாக அவர்களின் நோய் பாதிப்பு அதிகமாகக் காட்டப்படுகிறது. இதனால் மாற்றுச் சிகிச்சைக்கான முன்னுரிமைப் பட்டியலில் பெண்களுக்குப் பதிலாக ஆண்கள் எளிதாக முன்னிலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்தியாவில் பெண்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதை தங்கள் பொறுப்பாகக் கருதுவதால், தியாக மனப்பான்மையோடு உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். எனவே, உறுப்பு தானம் வழங்கும் போது பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா அல்லது சுய விருப்பத்துடன் செய்கிறார்களா என்பதையும், உறுப்பு மாற்று சிகிச்சையில் பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
