சென்னை மாவட்டம் பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் இடையே, பிரியாணி சாப்பிடுவதைக் காரணமாக கொண்டு நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அக்காள்-தங்கை இடையிலான இந்த சண்டையை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த தங்கை, தனது அக்காவின் செல்போனை உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த  தாயார், தங்கையை அடித்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த தங்கை, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்தார். உடனே அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார். அவருக்கு தலை, முக பகுதியில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தில் சாதாரண பிரச்சனைகளுக்கும் தற்கொலைக்கு முயற்சி செய்வது அதிகரித்து வருகிறது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மனநல பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் நல்ல தீர்வு பெற முடியும். உதவிக்காக மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104 (24 மணி நேர சேவை) என்பதை தொடர்பு கொள்ளலாம்.