டெல்லியில் உள்ள லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இரண்டு தோழிகளை நபர் ஒருவர் ரகசியமாகப் படம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், குற்றவாளியைக் கண்டிப்பதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் உடைகளைக் குறை கூறி விமர்சித்து வரும் நெட்டிசன்களின் செயல் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

கிரீன் பார்க் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண்கள், அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தங்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அந்த நபரைப் பிடித்து விசாரித்த அவர்கள், தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை அவர் உடனடியாக நீக்கிய காட்சியைத் தங்களது மொபைலில் பதிவு செய்தனர். புகைப்படங்களை அழித்துவிட்டு “எந்தப் புகைப்படங்கள்?” என்று அந்த நபர் நாடகமாடியுள்ளார். உடனே சந்தேகமடைந்த பெண்கள், அவரது செல்போனில் உள்ள ரீசைக்கிள் பின் கோப்பினைச் சோதித்தபோது, அவர் புகைப்படங்கள் மட்டுமின்றி ரகசியமாக வீடியோவும் பதிவு செய்திருந்தது அம்பலமானது.

அனுமதியின்றிப் படம் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று பெண்கள் கூறிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது.

ஆனால், குற்றம் செய்தவனை எச்சரிப்பதற்குப் பதிலாக, “இத்தகைய உடைகளை அணிந்தால் யார் வேண்டுமானாலும் படம் பிடிப்பார்கள் தான்” என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே சமூக ஊடகப் பயனர்கள் பழிசுமத்தத் தொடங்கியிருப்பது சமூகத்தில் நிலவும் வக்கிர புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>

 

பெண்கள் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்பதைத் தாண்டி, அனுமதியின்றி மற்றவர்களின் தனிமைக்குள் நுழைந்து அத்துமீறும் குற்றச் செயல்களைத் தட்டிக்கேட்க வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.