உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டம், ராணிபோகரி பகுதியில் உள்ள போக்பூரில் கடந்த  வியாழக்கிழமை பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது இரண்டு வாகனங்கள் மோதியதையடுத்து, இரண்டு குழுக்களுக்கிடையே சண்டை வெடித்தது.

அதில் இளைஞர்கள் மற்றும் சில பெண்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இறுதியில் சண்டை முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அபாசமான வார்த்தைகள், கூச்சல்கள் மற்றும் கல் வீச்சுகள் நடந்தன.

அந்த மோதலில் ஒரே நேரத்தில் சிலர் வாகனத்தை பயன்படுத்தி எதிரணி உறுப்பினரை மோத முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கண்ணாடி துண்டுகள் சிதறியபடி, அந்த இடம் மோதல் களமாக மாறியது. இந்த வன்முறைச் சம்பவம் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதில் இளைஞர்கள் எப்படி கட்டுப்பாடின்றி நடந்துகொள்கிறார்கள் என்பதும், அந்த வீடியோவில் அவர்களின் ஆவேசத்தையும் தெளிவாகக் காண முடிகிறது.

சம்பவத்துக்குப் பிறகு போலீசார் அவசரமாக சம்பவ இடத்துக்குச் சென்று, நிலைமையை கட்டுப்படுத்தினர். அந்த தகராறில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இந்த மோதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக, அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக அமைதியை பாதிக்கும் இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.