சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மகன் அழகேசன். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டு வாசலில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அழகேசன் அங்கிருந்து சென்று விட்டார். கோபத்தில் ராஜேந்திரன் தனது மகன் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளுக்கு அங்குள்ள சுவிட்ச் பெட்டியில் இருந்து மின்சாரத்தை பாய்ச்சி உள்ளார். அந்த மின்சாரம் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.