சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உரிமையாளராக இருப்பவர் நாங்குநேரியை சேர்ந்த வானமாலை. இவர் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் குடியிருப்பு சங்கத்தில் நிதிமுறைக்கேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து அவரை வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்பு உரிமையாளர்களில் ஒருவர் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்க நொளம்பூர் காவல் நிலையத்துக்கு வானமாமலை சென்றுள்ளார். அங்கு அவரை காவல்துறை ஆய்வாளர் அவமானப்படுத்தியதாக தேசிய பட்டியல் இன ஆணையத்துக்கு வானமாமலை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவை பரிசீலனை செய்த தேசிய பட்டியல் இன ஆணையம் சென்னை காவல்துறை ஆணையத்திற்கு பதிலளிக்கும் படி உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் பேரில் நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வானமாமலை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்குக்கு பதில் மனு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் கோரிக்கை அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?”என கேள்வி கேட்டார். மேலும் மனுதாரர் கொடுத்த புகாரில்,  காவல் ஆய்வாளர் முன்பு அமர்வதற்கு புகார்தாரருக்கு  அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது குறித்து நீதிபதி, “வெள்ளை சட்டையுடன் வந்தால் தான் சிகப்பு கம்பளம் வரவேற்பு கொடுப்பீர்களா?, அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?. அவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை எண்ண மாட்டீர்களா?.

அவர்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு நீங்கள் சொல்பவர் தான் இருக்கையில் அமர வேண்டும் மற்றவர்கள் அமரக்கூடாது எனக் கூறுவதற்கு நீங்கள் யார்? அரசு அலுவலகம் என்பது அனைத்து மக்களுக்கும் உரிதானது” என நீதிபதி அதிரடியாக அடுத்தடுத்த கேள்விகளை கேட்டார்.

இதனை அடுத்து காவல்துறை தரப்பில்”சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.