ஹைதராபாத்தில் சிந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பார்கவ் (34). இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். இவர் பல ஐடி நிறுவனங்களில் மனித வள மேலாளராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் பார்கவ் மடாப்பூரில் neogen softech solution என்ற பெயரில் போலியான ஐடி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பணம் சம்பாதிப்பதற்காக, செயற்கையான சூழ்நிலையை உருவாக்கி போலியான ஊழியர்களை வைத்து நிறுவனம் செயல்படுவது போல வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றி நம்ப வைத்துள்ளார்.

மேலும் தனது நிறுவனம் கூகுளில் தோன்றும் வகையில் ஏற்பாடும் செய்துள்ளார். மேலும் அவரது இணையதளத்தில் முறையாக அலுவலக அமைப்பு காண்பிக்கப்பட்டதால் இதனை உண்மையான நிறுவனம் என நம்பி பல இளைஞர்கள் ஏமாந்துள்ளனர். வேலை தேடுவோரின் பயோடேட்டாவை பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் இருந்து பெற்று அவர்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் நேர்முகத் தேர்வுகளை நடத்துவது போலவும் ஏமாற்றியுள்ளார்.

இதன் பின்னர் ஒரு லட்சம் இரண்டு லட்சம் வரை பணம் பெற்ற பின்னர் பட்டதாரி இளைஞர்களுக்கு போலியான ஐடி கார்டு, ஆஃபர் லெட்டர், நியமன கடிதங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார். பணத்தை முழுவதுமாக பெற்ற பின்னர் தனது அலுவலகத்தை மூடிவிட்டு, மொபைல் எண்களையும் முடக்கி விட்டு பணத்துடன் தப்பி ஓடி உள்ளார்.

ஏற்கனவே பார்கவ் மீது மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜூடி மெட்டலா, மடப்பூர், கல்வகுர்த்தி ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நான்கு வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினரின் தீவிரம் முயற்சியால் பார்கவ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ரூபாய் ஒரு லட்சம் பணம் ஐந்து போலி நியமன கடிதங்கள் 2 ஐடி கார்டுகள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.