உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  ஹபீஸ் கன்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நுக்தா பிரசாத் (38). இவரது நண்பர்கள் முனீஸ் ஷர்மா (40), ஜிஜேந்திரா (32) ஆகியோர் ஆவர். இந்த நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் பரேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ரித்தோரா நகரத்திற்கு மூன்று பேரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். நுக்தா பிரசாத் பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் அருகே பைக் சென்று கொண்டிருந்தபோது பைக்கின் முன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் பைக்கில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். எதிரே வந்த கார் நொடிப் பொழுதில் தப்பி சென்றது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மூன்று நண்பர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று நண்பர்களும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.