உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தில் பத்திரிகையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஊழல் சம்பந்தமான தகவலை வெளியிட்டதற்குப் பிறகு தொடர்ந்து காவல்துறையிடமிருந்து மிரட்டல்கள் வருவதாக  கூறி, பத்திரிகையாளர் இஸ்ரார் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு முந்தைய வீடியோவில், இஸ்ரார் மற்றும் அவரது மனைவி, பிசல்பூர் பகுதியைச் சேர்ந்த SDM நாகேந்திர பாண்டே, நகராட்சி மன்றத் தலைவர் ஷ்யாம் பிஹாரி போஜ்வால், ஒப்பந்ததாரர் மொயின் உசேன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். “நாங்கள் எதையும் தவறாக செய்யவில்லை.

உண்மையை வெளிக் கொண்டு வந்ததற்காக எங்களை பொய் வழக்குகளில் சிக்க வைக்கிறார்கள்,” என வீடியோவில் தெரிவித்தனர். மேலும் வீடியோவில் “நாங்கள் முதல்வர் யோகியிடம் நீதி கேட்டோம். ஆனால், எங்களுக்கு இது தவிர வேறு வழியில்லை. விஷம் குடிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

தற்போது, இருவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைவில் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறம், SDM நாகேந்திர பாண்டே, “இஸ்ரார் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை” என மறுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிபிட் காவல் கண்காணிப்பாளர் பிரதிக் தஹியா தெரிவித்துள்ளார். மேலும், ஒப்பந்ததாரர் மொயின் உசேன், இஸ்ரார் தான் பணம் கேட்டதாகக் கூறி போலீசில் முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரார் வெளியிட்ட ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் ஊடக சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.