கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் சினேகா(22) என்ற பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கிணத்துக்கடவு அருகே உள்ள முத்து மலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் மாலையும், கழுத்துமாக தஞ்சம் புகுந்தனர். இது குறித்து காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், இருவரும் தங்களது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் அதனால் தங்களது பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரி உதவி கேட்டனர்.

அதன் பின் இருவரின் பெற்றோரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதனை அடுத்து இரு விட்டார்களும் வந்ததும் கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சகாதேவன் இரு குடும்பத்தாரிடமும் நடந்தவற்றை கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தார்.