
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டதால் ஏற்பட்ட தகராறில், பாதுகாப்புப் படையினரும் பராமரிப்பு ஊழியர்களும் அங்கு வசிப்பவர்களைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பராமரிப்புத் துறையைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை மாலை சூப்பர்டெக் ஈகோ வில்லேஜ்-1 இல் வசிக்கும் மக்கள் மின்வெட்டு குறித்து பாதுகாப்பு காவலர்களிடம் கேட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இருப்பினும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, பாதுகாப்புக் காவலர்கள் வன்முறையில் இறங்கி, பலரை அடித்து, உதைத்து மற்றும் தடியடியால் தாக்கினர். பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குடியிருப்பாளர்கள் பராமரிப்புத் துறையை அணுகினர். ஊழியர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு காணொளியில், பாதுகாப்புக் காவலர்களும் பராமரிப்பு ஊழியர்களும் ஸ்கூட்டரில் வந்த ஒருவரை உதைத்து, குச்சிகளால் அடிப்பதைக் காணலாம், அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் அவரை அடிகளிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குடியிருப்பாளர்களைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ரவீந்திரன், சோஹித், சச்சின் குந்தல் மற்றும் விபின் கசானா ஆகியோரைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.