உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதல் சர்வதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் நேற்று உக்ரைன் ராணுவம், ரஷ்யா உள்ளேயே உள்ள விமானத் தளங்களை ட்ரோன்களால் தாக்கியது.

இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக Tu-95 மற்றும் Tu-22 வகை குண்டுவீச்சு விமானங்கள் இதில் தீக்கிரையாகி உள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு வெளியான வீடியோவில், விமானங்கள் தீயில் எரிவதுபோல் காட்சிகள் பதிவாகி வைரலாகியுள்ளன. எனினும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தாக்குதலுக்கான திட்டமிடல் ஒரு வருடத்திற்கு மேல் நடந்திருக்கலாம் என்றும், துல்லியமான இலக்குகளுக்கு சரமாரியாக ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ரஷ்யாவின் விமானத் தளங்கள் தீவிர சேதம் அடைந்துள்ளதாலும், தீயணைப்பு படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய மற்றும் தீவிரமான தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல், ரஷ்யா மீது உக்ரைன் காட்டிய புதிய யுத்த உத்தியாகவும், ரஷ்யாவுக்கு ஒரு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.