
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான குவேட்டாவை சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் tiktok செயலியில் அடிக்கடி வீடியோ போடுவதை விருப்பமாக வைத்துள்ளார். இதை நிறுத்துமாறு அவரது தந்தை கண்டித்துள்ளார். ஆனாலும் சிறுமி தந்தையின் பேச்சை கேட்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை தனது மகளை கொலை செய்ய திட்டம் தீட்டி தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிலிருந்து தனது சொந்த ஊரான குவேட்டாவுக்கு வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் வீடியோ போட வேண்டாம் என்று எடுத்து பொறுமையாக கூறியுள்ளார். ஆனால் சிறுமி கேட்கவில்லை.
இதனால் கோபம் தனியாத தந்தையும் சிறுமியின் தாய் மாமாவும் திட்டமிட்டு அந்த சிறுமியை சுட்டு கொன்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிறுமியின் தந்தை ஆரம்பத்தில் தங்கள் வீட்டிற்கு வெளியே வான்வழி துப்பாக்கி சூட்டின் போது சிறுமி தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும் மருத்துவமனைக்கு விரைந்த நிலையில் மகள் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் விசாரணையில் தனது மகள் tik tok வீடியோ போடுவதை நிறுத்தாததால் அவரை கொன்றதாக தந்தை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக கொலை செய்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.