துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதிக அளவு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  100 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது தான் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலி துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களிலும்,  இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் கட்டிடங்கள் குலுங்கி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் பேரிடர்   பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தானின் தகவல் மந்திரி மரியும் அவுரங்கசீப் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது, துருக்கியில் இந்த பேரிடரால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குவதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துருக்கி நாட்டின் அங்காரா என்ற நகருக்கு சென்று பார்வையிட உள்ளார்.

இதற்காக இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த அனைத்து கட்சி மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டது.  ஆகவே கூட்டணியினருடன் ஆலோசித்து அடுத்த தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது பற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் என்ற செய்தி நிறுவனம் சார்பில்  வெளியிட்டுள்ளதாவது, நிவாரண பணிகளில் துருக்கி அதிபர் மற்றும் பிரதமர் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரை அங்காராவில் வரவேற்க முடியாத சூழல் காணப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.