திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர். இதையடுத்து இந்த கட்டிடத்துக்கு கட்டிட அனுமதியும் தேவாலயம் கட்டுவதற்கு திட்ட அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மத போதகர் ஜோசப் வில்சன் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அனுமதி கொடுக்க மறுத்து விண்ணப்பத்தை நிராகரித்து கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த பிரார்த்தனை அரங்கத்தை மூடி தாசில்தார் சீல் வைத்தார். இதை எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் மதபோதகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, பிரார்த்தனை கூட்டம் அரங்கம் கட்டுவதாக இருந்தால் விதிகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் எந்த அனுமதியும் பெறாமல் பிரார்த்தனை கூட்டம் நடத்த எந்த உரிமையும் மனுதாரருக்கு இல்லை. மனுதாரரின் வீட்டை பிரார்த்தனை கூட்டமாக மாற்றவும் அனுமதி கிடையாது. அதனால் மனுதாரர் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். அதே நேரம் இந்த வீட்டில் மனுதாரர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தக் கூடாது.

ஒரு வேலை இந்த வீட்டை பிரார்த்தனை அரங்கமாக மாற்ற விரும்பினால் மனுதாரர் மாவட்ட கலெக்டரை அணுக வேண்டும். அதேபோன்று மனுதாரர் எந்த அனுமதியும் பெறாமல் மீண்டும் இந்த வீட்டை பிரார்த்தனை அரங்கமாக பயன்படுத்த முயற்சித்தால் சட்டப்படி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.