தமிழகம் முழுவதும் மதுபான கடைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதாவது கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபானங்களை வாங்கும்  நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன்படி கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபானங்கள் வாங்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் முதல் கட்டமாக சென்னை கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை அடிப்படையில் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மதுபான கடைகளில் கணினி மயமாக்கல் பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு அனைத்து கடைகளிலும் 3 பிளக் போர்டுகள் கொண்ட ஸ்விட்ச் போர்டுகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் சிம் கார்டுகள் மற்றும் நெட்வொர்க் தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்படும் வருகிறது.