தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்கள் குறித்து தற்போது அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் தனக்கு பிடிக்காமல் ஒரு அருவருப்பான படத்தில் நடித்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு பிடிக்காமலேயே ஒரு அருவருப்பான படத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில சமயங்களில் கதாநாயகிகளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சில படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அதற்கு பெரிய இயக்குனர் அல்லது ஹீரோ காரணமாக இருக்கலாம். சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடுமோ என்ற பயத்தில் அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அது நான் நடித்த அருவருப்பான படங்களில் ஒன்று. அந்த படத்தின் பெயரை சொல்ல எனக்கு விருப்பமில்லை. அந்தப் படத்தில் நடிக்கும் போது என் மீது எனக்கே கோபம் வந்தது. படப்பிடிப்பு அரங்கில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு எனக்கு கொடுத்த வசனங்களும் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. மேலும் அந்த படத்தை இப்போது நினைத்தாலும் மிகவும் அருவருப்பாக இருக்கிறது என்று கூறினார்.