
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் வசித்து வருபவர் மைக்கேல் ஜே. எஸ்குவிலின்(43). இவர் தீயணைப்பு மீட்பு பிரிவின் ஆம்புலன்சை திருடிச்சென்று சாலையில் ஒழுங்கற்ற முறையில் மாறி மாறி ஒட்டியதோடு எதிர்பாராத விதமாக மற்ற வாகனங்களை இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். சில மையில் தூரம் வாகனத்தை ஓட்டிய பிறகு ஒரு சாலையில் நிறுத்தி வைத்து விட்டு மதுபானம் குடித்துள்ளார். இந்த செயலை இவரை பின்தொடர்ந்து வந்த காவல்துறை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
அதன் பின் வேகமாக அவரை வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து கைது செய்துள்ளனர். இது குறித்து நடத்திய விசாரணையில் மைக்கேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மதுபான அருந்திய நிலையில் அவசர சேவை பணியாளர்கள் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் அவர்களது ஆம்புலன்ஸ் திருடி ஒட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்காக எஸ்குவிலின் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுதல், அவசர ஊர்தி வாகனத்தை திருடுதல் போன்ற வழக்குகளின் கீழ் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் இது இவருக்கு முதல் குற்றம் அல்ல ஏற்கனவே நான்கைந்து முறை இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து எஸ்குவிலின் தரப்பு வக்கீல்,” எஸ்குவிலின் கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், அவரது குடும்ப உறவுகள் இங்கு வாழ்ந்து வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.
தற்போது எஸ்குவிலின் வேலையை இழந்து உள்ளதாகவும், இதனால் அவருக்கு வருமானம் இல்லை எனவே ஜாமின் தொகையை செலுத்துவது கடினம் எனவும் வாதாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமூக பாதுகாப்பு கருத்தில் கொண்டு GPS கண்காணிப்பு மற்றும் மதுபானம் அருந்துவதை முற்றிலும் தடை செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் எஸ்குவிலின் ஹில்ஸ்பெரோ கவுண்டில் உள்ள சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை $33,513 பதிலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.