இந்தியாவில் திருமணம் அல்லது திருவிழாக்கள் என்றால் பட்டாசுகள் இல்லாமல் நிறைவடைவது இல்லை. ஆனால், பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு மற்றும் புகை காரணமாக சுவாசம் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது வாடிக்கை. இந்நிலையில், பட்டாசுகளுக்குச் சீரான மாற்றாக அமையக்கூடிய, மாசு ஏற்படுத்தாத ஒரு ‘நாட்டுப்புற யோசனை’ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ஒரு பெரிய நூலில் பல பலூன்களைக் கட்டி, ஒரு நபர் அந்த நூலை இழுக்கிறார். அப்போது பலூன்கள் பட்டாசு வெடிப்பது போன்ற பாணியில், ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கும் காட்சி அந்த காணொளியில் உள்ளது. மாசு ஏற்படுத்தாத இந்த நாட்டுப்புற யோசனைக்கு இணையப் பயனர்கள் பலர், நோபல் பரிசு கொடுக்கலாம் என்று வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காணொளியானது சீனாவைச் சேர்ந்தது என்று கூறப்படும் நிலையில், திருவிழாக்கள் மற்றும் திருமணங்களின்போது பட்டாசுகளைப் பயன்படுத்த சீனா அரசு தடை விதித்துள்ளதால், சீனர்கள் இந்தக் ‘பலூன் பட்டாசு’ முறையைக் கண்டுபிடித்துள்ளதாக @Rainmaker1973 என்ற ‘எக்ஸ்’  பயனர் பதிவிட்டுள்ளார். இந்தக் காணொளியைப் பார்த்த பலர், “சீனர்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவர்கள்” என்று புகழ்ந்தாலும், சிலர், “இந்தச் செயலால் ஒலி மாசு மற்றும் பிளாஸ்டிக் மாசு என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பவும் செய்துள்ளனர்.