உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறி ஏற்பட்ட விவாதம் ஒரு கோரமான மோதலில் முடிந்துள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியை ரீதா ஆர்யா மற்றும் சமையலர் குஞ்சா தேவி ஆகிய இருவருக்கும் இடையே உணவின் தரம் குறித்து வாக்குவாதம் வெடித்தது.

அது அப்படியே கைகலப்பாக மாற, கல்வி புகட்டும் பள்ளிக்கூடம் ஒரு மல்யுத்த மைதானம் போல மாறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலைமை ஆசிரியை ரீதா ஆர்யா கூறுகையில், “என்னைத் தலைமை ஆசிரியை பொறுப்பில் இருந்து நீக்கச் சதி நடக்கிறது. சமையலர் குஞ்சா தேவி திட்டமிட்டே கெட்டுப்போன அரிசியைப் பயன்படுத்தி உணவு சமைக்கிறார்” எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வித் துறையின் நிர்வாகம் குறித்துப் பொதுமக்கள் கடும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.