விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. இவர் பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை அடுத்து இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை உயிரிழந்து பிறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் குழந்தையின் உடலை பெற்றுக் கொண்ட நிலையில் குழந்தை பிறந்ததிலிருந்து தாய் முத்துமாரியை உறவினர்கள் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் முத்துமாரி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முத்துமாரியின் உடலை பரிசோதனை செய்யக்கூடாது எனக் கூறி மாவட்ட நிர்வாகம் இறப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.