டெல்லியில் கடந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக அபார வெற்றி பெற்றது. இத்தேர்தலில் தோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் மன அமைதியை தேடி வருகிறார். இந்நிலையில் பஞ்சாபின் போஷியார்பூரில் அடுத்துள்ள சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆனந்த்கர் கிராமம் உள்ளது. அங்குள்ள தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்க உள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு செல்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் காரில் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு பாதுகாப்பாக கான்வாய் வாகனங்கள் உடன் சென்றுள்ளது. அவர் தேர்தலில் தோற்றாலும், தனது ஆடம்பர வாழ்க்கையை இன்னும் விடவில்லை என்று பாஜக விமர்சித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வருடம் கெஜ்ரிவால் உதவியாளரால் அவமதிக்கப்பட்டதாக கூறிய ஆம் ஆத்மி கட்சியின் எம் பி-யான ஸ்வாதி மலிவால், கெஜ்ரிவாலை அமெரிக்க அதிபர் டொனால்டு  டிரம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, முழு உலகையும் விஐபி கலாச்சாரத்திற்காக கெஜ்ரிவால் விமர்சித்தார். ஆனால்  இன்று டிரம்பை விட பெரிய பாதுகாப்புடன் சுற்றி வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.