நாடு முழுவதும் ஏசி களில் குறைந்தபட்சமாக வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்-க்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். வீடுகள், வணிக வளாகங்கள் பயன்படுத்தப்படும் ஏசி களில் தற்போது குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றி அமைக்கும் வசதி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கூறியதாவது, ஏசி-களில் குறைந்தபட்ச வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதாவது 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான அளவையோ, 28 டிகிரிக்கு அதிகமான அளவையோ ஏசி களில் இனி மாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி களுக்கு மட்டுமின்றி கார்களில் பயன்படுத்தும் ஏசி களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மின்சார தேவையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.