தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தமிழ்நாடு ஆளுநர் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள துணைவேந்தர் ஜெகன்நாதனுக்கு நடத்திய பிரிவு உபச்சார விழா குறித்து கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது, ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கி,  லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருப்பவர் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன். அவருக்கு பிரிவு உபசார விழாவினை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், அதுவும் ஆளுநர் மாளிகையிலேயே நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என  தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்கலைக்கழகங்கள் தோறும் மதவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஆளுநர் அவர்கள், ஊழல் வழக்கில் உள்ளவரை, அதிலும் குறிப்பாக பினாமி கம்பெனியை உருவாக்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் வரவேற்றார்? முறைகேடுப் புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர்.
துணை வேந்தராக இருக்கும் போதே சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டியதால் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று உயர்நீதிமன்றத்தாலேயே எச்சரிக்கப்பட்டவர்.
அவருக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் பணி நீட்டிப்பு வழங்கியதோடு மட்டுமில்லாமல்,  இப்படிப்பட்ட துணை வேந்தர் ஒருவருக்கு ராஜ்பவனில் பிரிவு உபசார விழாவினையும் நடத்தியதன் மூலம் “வேந்தர்” என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை ஆளுநரே இழந்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் திமுக ஆட்சிக்கு எதிராக தனது மதவாத கருத்துக்களை பரப்ப பாடுபட்ட துணை வேந்தருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ள ஆளுநர் வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளதோடு, மற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு எல்லாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உயர்கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ளார். ஊழல்வாதிக்கு ஆளுநர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது மட்டுமின்றி, பல்கலைக்கழக வரலாற்றில் ஆளுநர் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என கூறப்பட்டிருந்தது.