ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுப்பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் மாறன் கடந்த 16ம் தேதி தோட்டத்தில் காவலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரை மிதித்து கொன்றது.

இந்நிலையில் மாறன் இறந்த செய்தியை கேட்ட அவருடைய மனைவி அழுது கொண்டே இருந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட மாறன் உடலை பார்த்து அலறி கண்ணீர் விட்டார். இதையடுத்து உறவினர்கள் அனைவரும் அவரது உடலை தணக்கம் செய்ய கொண்டு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த சன்மாதி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.