தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா குற்றவாளி ராஜ்குமாருக்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

இவ்வழக்கு குறித்த விசாரணையை சிறப்பாக செய்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பிரேமா மற்றும் வனிதா, வழக்கை திறம்பட வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு முழுவதுமாக உதவிய ஹெட் கான்ஸ்டபிள் ரபிலா குமாரி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பாராட்டியுள்ளார்.