பீகாரில் உள்ள சிவான் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை அன்று டெல்லிக்குச் செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளனர். அதன் பிறகு அதில் 11 வயதான சிறுமியின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குரூப் டி அதிகாரி பிரசாந்த் குமார் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அந்தச் சிறுமி தனது தாயிடம் ஓடிச் சென்று அவளை கட்டிப்பிடித்து அள தொடங்கினார். இதையடுத்து தனது தாயிடம் நடந்த விஷயத்தை கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தகவலை தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மற்ற பயணிகளுடன் சேர்ந்து குமாரை பிடித்து கொடூரமாக தாக்கினர். இதைத்தொடர்ந்து கான்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அரசு ரயில்வே காவல்துறையினர் மயக்கமடைந்த குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் காவல்துறையினர் உயிரிழந்த குமாரின் மீதும், அவரை தாக்கிய குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.