சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான பார்த்திபன்(35) என்பவர் இவர்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் சோத்துப்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்டில் பஞ்சர் போடும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலுக்கும், பார்த்திபனுக்கும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சரஸ்வதி சமாதானப்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலுக்கும், சரஸ்வதிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சரஸ்வதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கோபால் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் பார்த்திபன் வந்துள்ளார்.

அப்போதும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபால், பார்த்திபனை அடித்து உதைத்துள்ளார். அதன் பின் இருவரும் தங்களது அறைக்கு சென்று உறங்கியுள்ளனர். இருப்பினும் ஆத்திரம் தீராததால் கோபால் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்து மகனை தாக்கியுள்ளார்.

இதில் பார்த்திபனின் கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் கோபால் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் தப்பியோடிய  கோபாலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.