டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை தினசரி இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.  இதனால் மது வாங்குபவர்கள் மதுபானக்கடை முன்பும், சாலையோரத்திலும், அருகிலுள்ள பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்லி திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.

பொதுயிடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பின் பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக பதில் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த வகையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், டாஸ்மாக் மதுக் கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு. ஆகவே அவற்றில் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது பற்றி அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.