நம்மில் பலரும் செல்போனில் ‘சப்வே சர்ஃபர்ஸ்’ (Subway Surfers) கேமை விளையாடி இருப்போம். அதில் ரயில்களுக்கு இடையிலும், ரயில் கூரையின் மீதும் ஓடி காயின்களை சேகரிப்பது தான் இலக்கு. ஆனால், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அந்த விளையாட்டை நிஜ வாழ்க்கையிலேயே விளையாடிப் பார்த்து நெட்டிசன்களை அதிர வைத்துள்ளனர்.

ஓடிக்கொண்டிருக்கும் ரயில் ஒரு நடை மேம்பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பாலத்தில் இருந்து லாவகமாக ரயில் கூரையின் மீது குதிக்கும் இவர்களின் செயல் பார்ப்பவர்களைத் திக் திக் என உறைய வைக்கிறது.

ரயில் மீது குதித்த அந்த இளைஞர்கள், கேமில் வருவது போலவே ரயில் கூரையின் மேல் மின்னல் வேகத்தில் ஓடி ஸ்டண்ட் செய்கின்றனர். இதில் ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

“கேமில் வருவது போல போலீஸ்காரரும் அவரது நாயும் தான் இந்த வீடியோவில் குறைவு” என நகைச்சுவையாகப் பகிரப்பட்டாலும், இது போன்ற ஆபத்தான ஸ்டண்ட்கள் உயிருக்கே உலை வைத்துவிடும் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது உயிரைப் பணையம் வைக்கும் இத்தகைய முட்டாள்தனமான செயல்களை யாரும் செய்ய வேண்டாம் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.