
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மனோஜ் பாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் உறவினரின் மகன் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிளஸ்-1 மாணவர் உறவினரான கருத்தப்பாண்டி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை வயலில் ஓட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனோஜ் பாண்டி டிராக்டரின் பக்கவாட்டில் கால் வைத்து ஏற முயன்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தான். உடனடியாக டிராக்டரின் சக்கரம் மற்றும் அதன் அருகில் பொருத்தப்பட்ட ரொட்டேட்டரில் சிக்கி உடல் சிதைந்து மனோஜ் பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனோஜ் பாண்டியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிளஸ்-1 மாணவர் மற்றும் டிராக்டர் உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.