தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஜன்னல் சட்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பானோத் ருக்மிணி என்ற பெண்ணை, அவரது சக தொழிலாளியான ரவி என்பவர் கோடரியால் தாக்கிய பயங்கர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவு நேரத்தில் ருக்மிணி தனது உணவை உண்டு கொண்டிருந்தபோது, ரவி அவரிடம் கறி கேட்டுள்ளார். ஆனால், கறி தனக்கு மட்டுமே போதுமானது என ருக்மிணி மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவி, கோடரியால் அவரது கழுத்தில் பலமுறை தாக்கி தப்பியோடினார்.

இந்த கொடூர தாக்குதல் கிடங்கு போன்ற இடத்தில் நடந்ததாக சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. தாக்குதலுக்குப் பின் ருக்மிணி கிடங்கிலிருந்து வெளியேறுவதும் காணப்படுகிறது.

உள்ளூர் மக்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறை இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், பயமும் ஏற்பட்டுள்ளது.