சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் அம்பிகா தெருவில் சந்துரு லா அகாடமி என்ற சட்டப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் (50). அந்த பயிற்சி மையத்தில் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

அதில் 23 வயதுள்ள மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். அவரிடம் வழக்கறிஞர் சந்திரசேகர் தகாத முறையில் பேசியும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அப்பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சந்துரு லா அகாடமியின் உரிமையாளர் சந்திரசேகர் தன்னை தனியாக அழைத்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், இரவில் கார் அனுப்புகிறேன் அலுவலகத்திற்கு வந்துவிடு என அழைத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் அனைவர் முன்னிலையிலும் மாணவியை திட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பயந்து போன மாணவி அகாடமியில் இருந்து நின்று விடுவதாகவும், பயிற்சி கட்டணத்தை திரும்பி தருமாறும் கேட்டதற்கு வழக்கறிஞர் பதிவை ரத்து செய்து விடுவதாக மிரட்டி உள்ளார் எனவும் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் இதே போன்று பல மாணவிகளிடம் சந்திரசேகர் பாலியல் ரீதியாக மிரட்டி வருவதாகவும், அவருக்கு துணையாக அலுவலக உதவியாளர் மாயா என்பவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்திரசேகர், மாயா (35) ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாகியிருந்த வழக்கறிஞர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது ஏற்கனவே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.