மும்பையிலுள்ள ஷாருக்கான் வீட்டின் முன்பு ஆயிரகணக்கான ரசிகர்கள் திடீரென்று திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர் எதிர்த்தனர்.

மேலும் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதோடு ஷாருக்கான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பதான் பட பேனர்களையும் கிழித்து எறிந்தனர். இவ்வாறு வந்த எதிர்ப்பை அடுத்து பதான் திரைப்படத்தை மறுதணிக்கை செய்து சர்ச்சை காட்சிகளை நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மும்பையிலுள்ள ஷாருக்கான் வீட்டின் முன்பு ஆயிரகணக்கான ரசிகர்கள் திடீரென்று திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். இதனை அறிந்த ஷாருக்கான் உடனே வீட்டிலிருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். மேலும் ரசிகர்களை பார்த்து கையசைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.