
சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை ஈஸ்வரி நகரில் கார் டிரைவரான நிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பெமினா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு நிக்சன் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு அவர்கள் அருவியில் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து பெமினா உட்பட அனைவரும் கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது வென்னியாறு பாலம் அருகே வைத்து மரத்தில் இருந்து பெரிய கிளை ஒன்று முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த பெமினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெமினாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.