
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள், இயக்குனர்கள் என யார் வந்தாலும் எங்களுடைய களம் முற்றிலும் வேறானது.
ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்பவர்கள் நாங்கள் இல்லை. எந்த ஒரு சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் கைகோர்க்க மாட்டோம். இதனை வெளிப்படையாக அறிவிக்கிறேன். சராசரியான அரசியல்வாதியை போல திருமாவளவனை எடை போடாதீர்கள் அது எக்காலத்திலும் நடக்காது.
நாங்கள் நுழையக்கூடாது என்றால் நுழைவோம், நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், கூட்டம் போடக்கூடாது என்றால் மாநாடே நடத்துவோம். அதன் ஒரு பகுதியாக வரும் 31ஆம் தேதி திருச்சியில் மதச்சார்பின்மையை பாதுகாக்க மாபெரும் பேரணியை நடத்த உள்ளோம்.
அதிமுக, பாஜக, தவெக என யார் வேண்டுமானாலும் நமக்கான கதவுகளை திறந்து வைக்கலாம். ஆனால் அவ்வாறு எந்த கதவுகளையும் நாம் திறக்கவில்லை. என்னுடைய 2 எம்.பிக்களை எ , அமிட்ஷாவும், மோடியும் வேண்டாம் என சொல்லி விடுவார்களா?. பாஜக கட்சியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் பாஜகவிற்கு அழைப்பு விடுத்து என்னிடம் பேசினார்.
அதெல்லாம் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு திரும்பி விட்டேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும். சனாதன சக்திகள் எந்த சூழ்நிலையிலும் வலிமை பெற்று விடக்கூடாது பாஜக உடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம் இவ்வாறு அவர் கூறினார்.