
ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் தமிழக ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது வழக்கமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க தமிழக ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் போதும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், பெண்கள் பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். அந்த பெட்டியில் ஏறிய வாலிபர் கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளினார். அதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோன்று பலவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவல்துறையினரிடம் செயின் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் புறப்படும் ரயில்களில் ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மின்சார ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள், வேலை நிமித்தமாக தினமும் ரயிலில் பயணிக்கும் பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பகுதிவாரியாக புதிய வாட்ஸ் அப் குழுவை தொடங்க ரயில்வே காவல்துறையின் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய வாட்ஸ்அப் குழு பயன்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.