திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காட்டில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தமிழக காவல்துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிடை நீக்கம் எடுக்கப்படும் என தமிழக காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி வழக்கின் முழு விசாரணையும் முடியும் வரை ஜெயராம் பணிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை காவல் தலைமையகம் வெளியிட்டது.

தற்போது ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர் அடுத்த வருடம்  பணி ஓய்வு பெறுவதில் பிரச்சனை ஏற்படும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் ஓய்வூதிய பலன்களும் பாதிப்புக்குள்ளாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று ஒழுங்கு நடவடிக்கைகளில் ஏற்கனவே டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.