சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல பப்பில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது, பிரசாந்த் தலைமையில் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் முக்கியமாக நடிகர் ஸ்ரீகாந்தும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இன்று காலை நடிகர் ஸ்ரீகாந்தை அவரது இல்லத்தில் இருந்து போலீசார் அழைத்து சென்று, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தினாரா  அல்லது மற்றவர்களுக்கு வழங்கினாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

மேலும், அவரது உடல்நிலையில் போதைப்பொருள் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிளட் டெஸ்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் முடிவுகள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகத்திலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.