மத்திய ரெயில்வேயில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஹவுரா–மும்பை கிதாஞ்ஜலி எக்ஸ்பிரஸில் ஏப்ரல் 6ஆம் தேதி பயணித்த சமூக சேவகர் சத்யஜித் புர்மன், ரயில்வே உணவக ஊழியர்கள் குறைவான உணவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அம்ராவதி அருகே உள்ள பத்னேரா பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சத்யஜித் புர்மன், வேறு சில பயணிகளுடன் உணவு பாக்கெட்டுகளின் எடையை பரிசோதிக்க கேன்டீனுக்குள் சென்றுள்ளார்.

அப்போது, IRCTC ஊழியர்கள் அவரை “பயணிகளை தூண்டி விட்டார்” என்று குற்றம்சாட்டி, அவருடைய மொபைலை பறித்து தாக்கியதுடன், அங்கு கட்டாயமாக உட்கார வைத்தனர் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், மற்ற பயணிகளும் மிரட்டப்பட்டதாகவும், சிலர் தங்களையும் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

பின்னர் தப்பித்த ஒரு பயணி RPF ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைத்ததன் மூலம் போலீசார் வந்தடைந்து சத்யஜித் புர்மனை மீட்டனர். அடுத்த நாள், ஏப்ரல் 7ஆம் தேதி, கள்யான் ரெயில்வே நிலையத்தில் உள்ள GRP மையத்தில் சத்யஜித் புர்மன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, கள்யான் GRP போலீசார், ரஞ்சீத் பெஹரா, சுமன் கரண் உள்ளிட்ட ஏழு IRCTC ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் IRCTC ஊழியர்களின் பதட்டமான நடத்தையை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததோடு, ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவை தரம் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.