மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் விக்ரம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் பி.டெக் 3 ம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவனை இறுதியாண்டு மாணவர்கள் ஆடைகளை கிழித்து, தொடர்ந்து கேலி செய்து ராகிங் என்ற பெயரில் கொடுமை செய்துள்ளனர்.

அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என அந்த மாணவனிடம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அந்த மாணவனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தியதில், ராகிங் கொடுமையால் இப்படியானது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாணவர் கொடுத்த தகவலின் படி வேதாந்த மற்றும் முகுல் உபாத்யாய் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் கடிதம் அளித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி அந்த மாணவனை துன்புறுத்திய 5 மாணவர்கள் உடனடியாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அன்பர் பரத்வாஜ் கூறினார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் யு.ஜி.சி.யின் ராகிங் ஒழிப்பு குழு பல்கலைக்கழகத்திடம் விவரம் மற்றும் அறிக்கை ஒன்றை உடனடியாக சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.