தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலமாக மே 8-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனி நாட்களில் பொது கலந்தாய்வு மாறுதல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் தாங்கள் மாற விரும்பும் பகுதிகளை வரிசையாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி 12 இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் எமிஸ் இணையதளத்தில் தற்போது புதிய வசதி ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது.

அதாவது எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பள்ளிகளில் எத்தனை காலியிடங்கள் இருக்கிறது என்று விவரங்கள் தற்போது எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனில் எமிஸ் இணையதளம் மூலம் காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்வு நடைபெறும் போது ஆசிரியர்கள் தேர்வு செய்த இடங்கள் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இதன் மூலம் அந்த பணியிடத்தை வேறொரு ஆசிரியர் எடுத்துக் கொண்டார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதி ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.