குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரபல சாமியார் ஆசாராம் பாபு வசித்து வருகிறார். இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். கடந்த 2018ம் ஆண்டு, இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி  மெட்ரோ ரயில் பெட்டிகளில் சாமியார் ஆசாராம் புகைப்படம் கொண்ட விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விளம்பர போஸ்டர்களை தனது எக்ஸ் வலை பக்கத்தில் பதிவிட்ட வழக்கறிஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரின் விளம்பர போஸ்டர்களை மெட்ரோவில் காட்சிப்படுத்த அனுமதித்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்துள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில், பலரும் இதற்கு கண்டன தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவுக்கு பதில் அளித்த டெல்லி மெட்ரோ நிறுவனம், மெட்ரோ ரயிலில் இருந்து இந்த விளம்பர போஸ்டர்களை விரைவில் அகற்றுமாறு உரிமதாரருக்கு TMRC உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.