கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் அழுகிய நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் போத்தனூரில் வசித்த வினித்(22) என்பது தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7-ஆம் தேதி வினித் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினித் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார். எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.