திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம் குடும்ப சொத்து விஷயமாக கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வெளியூர் நபர்கள் சென்றனர். அவர்கள் ராசையா தங்களை தான் அவதூறாக திட்டுவதாக நினைத்து தட்டி கேட்டதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதிலிருந்த ஒருவர் திடீரென காம்பால் ராசையாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மற்ற இரண்டு பேரும் அவரை அடித்து உதைத்தனர். இதனையடுத்து மூவரும் ராசையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த ராசையா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.