இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இப்போது இயக்கி நடித்திருக்கும் படம் “பிச்சைக்காரன் -2”. இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் “மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2016-ம் வருடம் வெளியாகிய “ஆய்வுக் கூடம்” படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்திற்கு பயன்படுத்தி இருப்பதால் தடைவிதிக்க வேண்டும்.

மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சவுந்தர் மனுவுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளிவைத்தார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி சார்பில் பதில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ஆய்வுக் கூடம் படம் தொடர்பான எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது எனவும் அந்த படத்தை பார்த்தது கூட இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அதோடு வழக்கு தொடரப்பட்ட பிறகே அந்த படத்தை பார்த்துள்ளேன். எனினும் பிச்சைக்காரன் -2 திரைப்படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. படம் ரிலிஸ் ஆவதை தடுக்கவேண்டும் எனும் நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கை நீதிபதி ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் .