
சென்னை வேளச்சேரி கருமாரியம்மன் நகரை சேர்ந்த கவிதா- மணிகண்டன் தம்பதியினர் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு. நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் தனது நண்பர் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கி கொடுத்ததாகவும், நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஜோதிடர் கூறியுள்ளார். மேலும் இருவரையும் திருமுடிவாக்கத்தில் உள்ள விஜய் பாஸ்கர் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று ரூபாய் 85 லட்சம் கொடுத்தால் உங்களுக்கு பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசன்ஸ் வாங்கி தருவார் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய தம்பதியினர் 50 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால் பணம் கொடுத்து வருட கணக்கில் ஆகியும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜோதிடர் வெங்கட சுரேஷ் மற்றும் விஜய் பாஸ்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேளச்சேரி காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்த நிலையில் ஜோதிடர் வெங்கடசுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.